மன்னாரில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்…
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதையில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று (23) மாலை சடலத்தை அவதானித்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, சடலம் சிதைவடைந்து உருக்குலைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.
இன்று (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலத்திற்கு அருகில் பாதணியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.