யாழில் சிறுவர் குழுவினரால் வாள்வெட்டு

0 228

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டது.

அதில் அச்சிறுவன் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் என்று முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியை பொலிஸார் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் யாழ். நகரம், நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள், கைக்கோடாரி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.