காற்றின் தரம் குறைவு : டெல்லியில் விமான சேவை பாதிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்திய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 366 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று புதன்கிழமை (13) காலை அடர்ந்த மூடுபனி நிலவியுள்ளது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.30 மணிக்கு விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன. இதனால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆனந்த் விஹார் மற்றும் ஆயா நகர் ஆகிய 2 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதாக இந்திய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.