தனி சமுதாயம் ஆக்கப்பட்டு மனமுடைந்த ஒரு தமிழச்சியின் குமுறல்…

0 1,672

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற நாடாக காணப்பட்ட இலங்கையில் பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கென சுமார் 150 வருட காலத்திற்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து ஒரு சமூகம் அழைத்து வரப்படுகின்றது.

மலையும் காடுகளும் முற்புதர்களுமாக காணப்பட்ட ஒரு நிலப்பரப்பை தனது கடும் உழைப்பால் மாத்திரம் பொன் விளையும் பூமியாக மாற்றியமைத்தது அந்த சமூகம்..

எண்ணற்ற கலைகளையும், கலாச்சார பண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டது அந்த சமூகம்..

காலமாற்றங்களுக்கு ஏற்ப எத்தனை எத்தனை கல்வியியலாளர்களையும், மாமனிதர்களையும், விளையாட்டு வீரர்களையும் பிறப்பித்துள்ளது அந்த சமூகம் என்பதை அறிவோர் யார்..

இன்று எம்மத்தியிலிருந்து மருவி வருகின்ற எமது பாரம்பரிய கலைகளை இன்னுமே கட்டிக்காத்து வருகின்றது அந்த சமூகம்..

வேற்றினத்தார் யாரறிவார் காமன் கூத்தும், அருச்சுணன் தவசும்…

இன்றைய இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேசத்தில் பாரிய பங்காற்றி வருபவர்களே எம்மவர்கள்..

ஆரம்பத்தில் தமிழர்கள் என்ற பெருமைமிக்க வீரப்பெயரை மாத்திரம் கொண்டிருந்த இந்த சமூகம் காலப்போக்கில் இந்திய வம்சாவளித் தமிழர், மலையகத் தமிழர் என வகைப்படுத்தப்பட்டு விட்டனர்.

இன்று தனக்கென ஒரு தனி சமூகக் கட்டமைப்பை கொண்டுள்ள போதும் சமூகத்தில் ஏனைய இனங்களுக்கு நிகரான கல்வி, கலை, சமூகக் கட்டமைப்பு என வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் இந்திய வம்சாவளித் தமிழர் மலையகத் தமிழர் என வகைப்படுத்தப்பட காரணம் என்ன??

தான் சார்ந்த சூழலிலுள்ள ஒருவரை தமது நம்பிக்கைக்குரிய ஒருவரை மக்கள் பிரதிநிதியாக அரசியலுக்குள் உட்புகுத்தியது எதற்காக??

தமக்கான உரிமைகள் மீறப்படும் போது, உரிமைகள் மறுக்கப்படும் போது அதனை பெற்றுக்கொள்ள முனைகின்ற நிலையில் அவர்கள் முடக்கப்படுகின்றார்கள்.

தனித்துவமான சமூகமாக செயற்பட சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் காலங்கள் என்று தோன்றும்!! எவ்வாறு அது சாத்தியப்படும் என்ற பல்வேறு கேள்விகள் இன்று எம்மத்தியில் தொக்கி நிற்கின்றன.

பிறப்பால் தமிழன்!! வளர்ப்பால் தமிழன்!! கல்வி அறிவால் தமிழன்!! என பெருமையுடன் மார்த்தட்டிக்கொண்டு தமிழன் என்ற கர்வத்தில் வாழும் சமூகத்திற்கு மத்தியில் ஏன் மலையகத்தமிழன் என்ற ஒரு வேறுபாடு!

காடுகள், மலைகள் என ஏறி!! சிறுத்தைகளுடனும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடனும் தினம் தினம் போராடி, வலிகளை சுமந்து, வெற்றியீட்டிக்கொண்டிருக்கும் எமது பெண்களுக்கு நிகராக அந்நியநாட்டு ஆண்களால் கூட உழைப்பைத் தர முடியுமா??

இவ்வாறு வஞ்சகமின்றி உழைப்பை கொட்டித்தரும் எம்மவர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு தனது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே..

இந்த ஊதியத்தை பெற்றுக்கொள்ளத்தான் எத்தனை போராட்டங்கள்.. எத்தனை வாக்குறுதிகள்.. தேர்தல் மேடைகளில் மாத்திரம் எம்மவர்களின் புகழ் பாடும் அரசியல் தலைமைகள் அதன் பின்னர் அவர்களின் போராட்டத்தின் போதும் கோரிக்கைகளின் போதும் பாராமுகமாய் இருப்பது ஏனோ??

200வருட கால லயன் வாழ்க்கை முறையை மாற்றுவோம்!! தனிவீட்டுத்திட்டம் இன்றே சாத்தியப்படும் என காலகாலமாய் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்!! தற்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க ஆரம்பித்துள்ளன

Leave A Reply

Your email address will not be published.