ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்.

0 157

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை @realDonaldTrump டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

விதிகளை மீறியமையினால் ட்ரம்பின் இந்த கணக்கு அடுத்த 12 மணி நேரம் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் முடக்கம் தொடர்பில் தெரியவருவதாவது,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலர் திடீரென ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்ததுடன் அந்த முடிவுகளை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் கூறினார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

இதன்போது பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அவர்களை தடுக்க முற்பட்ட போது படையினருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதுடன் சுற்றுவட்டாரத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.

பின்னர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய தனது காணொளியை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

அதேபோல், ட்ரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின.

இந்த நிலையிலேயே டுவிட்டர் நிறுவனம் ட்ரம்பின் கணக்கை @realDonaldTrump தற்காலிகமாக முடங்கியுள்ளது.

அத்துடன் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.