மியான்மருக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்… விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

0 205

மியான்மரில் சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கை பிரஜைகள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் கூற்றுப்படி,

இலங்கைப் பிரஜைகள், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் இலங்கையர்கள் இவ்வாறு குறிவைக்கப்படுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம் தரும் வேலைகளை பெற்றுத் தருவதாக கூறி இவ்வாறு மனித கடத்தல்கள் இடம்பெறுவதாக சமீப அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இலாபகரமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற போலிக்காரணத்தின் கீழ் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கடத்தல்காரர்கள் ஈர்க்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் டுபாய் போன்ற இடங்களுக்கு நேர்காணலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அவர்கள் மியான்மரில் சைபர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த சைபர் குற்றவியல் முகாம்கள் மீதான விசாரணைகள் கடுமையான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியுள்ளன.

அங்கு பணியாளர்கள் கொடூரமான உடல் சித்திரவதைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சுற்றுலா விசாக்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் NAHTTF கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறுவது சட்டவிரோத ஆட்கடத்தலுக்கான பாதிப்பை அதிகரிக்கலாம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்திற்கும் எதிரானது.

இது போன்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் 0112102570/ 0768447700 என்ற NAHTTF இன் தொலைபேசி இலக்கம் மற்றும் nahttfsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் கடுமையான ரகசியத்தன்மையுடன் கையாளப்படும் என்றும் NAHTTF சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.